எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மார்வின் வில்லியம்ஸ்கட்டுரைகள்

தேவனுடைய மீட்பு

ஒரு இரக்கமுள்ள தன்னார்வலர் அவரது துணிச்சலான செயலுக்காக “காக்கும் தூதன்” என்று அழைக்கப்பட்டார். ஜேக் மன்னா ஒரு வேலை தளத்தில் சோலார் பேனல்களை நிறுவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஐந்து வயது சிறுமியைக் காணாமல் எல்லோரும் தேடிக்கொண்டிருக்க, இவரும் அக்குழுவில் சேர்ந்துகொண்டனர். அக்கம்பக்கத்தினர் அவர்களது கேரேஜ்கள் மற்றும் முற்றங்களில் தேடியபோது, மன்னா அவளை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் தேடினார். அங்கு புதைமணலில் சிக்கியயிருந்த சிறுமியை அவர் கண்டுபிடித்து, அவளை அந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியே இழுத்து, அவளுடைய தாயிடத்தில் பத்திரமாய் ஒப்படைத்தார். 

அந்தச் சிறுமியைப் போலவே தாவீதும் மீட்கப்பட்டார். அவருடைய இருதயத்திலிருந்து எழும்பிய கதறலுக்கு தேவன் பதிலளிக்க, தாவீது “பொறுமையுடன்” (சங்கீதம் 40:1) காத்திருக்கிறார். தேவனும் பதிலளித்தார். தேவன் அவருடைய கூக்குரலுக்கு செவிகொடுத்து, “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து” (வச. 2) அவனை தூக்கியெடுத்து காப்பாற்றியதின் மூலம் பதிலளித்தார். தாவீதின் வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளத்தை அளித்தார். வாழ்க்கையின் சேற்றுச் சதுப்பு நிலத்திலிருந்து கடந்த கால மீட்புகள், துதி பாடல்களைப் பாடுவதற்கும், எதிர்காலச் சூழ்நிலைகளில் தேவனை நம்புவதற்கும், மற்றவர்களுடன் அவருடைய சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் அவனது ஆர்வத்தை வலுப்படுத்தியது (வச. 3-4).

பொருளாதாரச் சிக்கல்கள், திருமணக் குழப்பங்கள், பற்றாக்குறை போன்ற வாழ்க்கைச் சவால்களில் நாம் நம்மைக் காணும்போது, தேவனிடம் கூக்குரலிட்டு, அவருடைய கிரியைக்காய் பொறுமையுடன் காத்திருப்போம் (வச. 1). அவர் ஜீவிக்கிறார். ஆபத்துக் காலத்தில் எங்களுக்கு உதவவும், நிற்க உறுதியான இடத்தை வழங்கவும் தயாராக இருக்கிறார்.

தேவனிடம் சரணடைதல்

தங்களுக்கு தாங்களே உதவி செய்துகொள்கிறவர்களுக்கு தேவன் உதவுவதில்லை. அவரை நம்பி சார்ந்துகொள்வபவர்களுக்கே தேவன் உதவிசெய்கிறார். சுவிசேஷயத்தை மையமாயக் கொண்ட வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடரான “தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” என்ற தொடரில் இயேசுவாக நடிக்கும் ஜோனத்தன் ரூமி, இதை 2018 ஆம் ஆண்டு மே மாதம் உணர்ந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் எட்டு வருடங்களாக வசித்த ரூமி, கிட்டத்தட்ட உடைந்துபோன நிலைமையில் இருந்தார். இருந்த உணவை உட்கொண்டு, வேறு வேலை ஏதும் கிடைக்காமல் தவித்தார். அவர் தன்னுடைய இருதயத்தை தேவனுடைய பாதத்தில் ஊற்றி, தனது ஜீவியத்தை தேவனிடத்தில் சரணடையச் செய்தார். “நான் சரணடைகிறேன், நான் சரணடைகிறேன்” என்ற வார்த்தைகளை சொல்லி ஜெபித்தார். அந்த நாளின் மாலையில், அவர் தபாலில் நான்கு காசோலைகளைப் பெற்றுக்கொண்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தில் இயேசுவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க தெரிந்தெடுக்கப்பட்டார். தன்னை விசுவாசிப்பவர்களுக்கு தேவன் உதவிசெய்வார் என்பதை ரூமி கண்டுபிடித்தார்.

“பொல்லாதவர்கள்" (சங்கீதம் 37:1) மீது பொறாமை கொள்வதற்கும் வருத்தப்படுவதற்கும் பதிலாக, எல்லாவற்றையும் தேவனிடம் ஒப்படைக்கும்படி சங்கீதக்காரன் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் அவரை மையமாக வைத்து, நன்மை செய்யவும் மனமகிழ்ச்சியாயிருப்பதற்கும் தேவன் நமக்கு கட்டளையிடுகிறார் (வச. 3-4). மேலும் நம்முடைய ஆசைகள், பிரச்சனைகள், கவலைகள் மற்றும் தினசரி அனைத்தையும் அவரிடம் சரணடையுங்கள். தேவன் நம்மை வழிநடத்தி நமக்கு சமாதானத்தை அருளுவார் (வச. 5-6). கிறிஸ்தவர்களாக, நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் அதிகாரம் அவருடையது. 

நாம் தேவனிடத்தில் சரணடைந்து அவரையே நம்புவோம். அவர் நம்முடைய வாழ்க்கையில் கிரியை நடப்பித்து, தேவயான மாற்றத்தை கொண்டுவருவார்.

உன்னிடத்திலுள்ளதை கிறிஸ்துவுக்காய் பயன்படுத்து

2001 இல் நிறுவப்பட்ட “சூவிங் ஹால் ஆஃப் ஃபேம”; பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது “தையல் கல்வி மற்றும் தயாரிப்பு மேம்பாடு மூலம் தனித்துவமான மற்றும் புதுமையான பங்களிப்புகளுடன் வீட்டு தையல் துறையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய” நபர்களை அங்கீகரிக்கிறது. 2005இல் இந்த நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட மார்த்தா புல்லென் போன்ற நபர்கள் இதில் உள்ளடங்குவர். அவள் “நீதிமொழிகள் 31 ஆம் அதிகாரத்தின் குணசாலியான ஸ்திரீயாய் அங்கீகரிக்கப்பட்டவர்… அவளுடைய வலிமை, உத்வேகம் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு யார் காரணம் என்பதை அவள் பகிரங்கமாய் சாட்சியிடத் தவறவில்லை.”

இந்த தையல் இயக்கமானது 21ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் இந்த இயக்கமானது முதலாம் நூற்றாண்டில் இஸ்ரவேல் தேசத்தில் இருந்துள்ளது. தபீத்தாள் என்னும் பேர்கொண்ட பெண் இந்த குணத்திற்கு பாத்திரவானாய் இருந்துள்ளாள். இவள் ஒரு கிறிஸ்துவின் விசுவாசி. தன்னுடைய சமுதாயத்தில் வாழ்ந்த ஏழை விதவைகளுக்கு அங்கிகளையும் வஸ்திரங்களையும் தைத்து உதவிசெய்துவந்தவள் (அப்போஸ்தலர் 9:36,39). அவள் வியாதிப்பட்டு மரித்தபின்பு, பேதுரு மூலமாய் அவளை உயிரோடு எழுப்பக்கூடுமோ என்று எண்ணி அவரை அழைத்துகொண்டுவந்தனர். அவர் வந்தபோது, அழுதுகொண்டிருந்த விதவைகள் தபீத்தாள் தைத்துக்கொடுத்த அங்கீகளையும் வஸ்திரங்களையும் அவரிடத்தில் காண்பித்தனர் (வச. 39). அவள் தன்னுடைய ஊரிலிருந்த மக்களுக்கு எப்போதும் உதவிசெய்தாள் என்பதற்கு இந்த வஸ்திரங்களே ஆதாரம் (வச. 36). தேவனுடைய வல்லமையினால் தபீத்தாள் மீண்டும் உயிரோடு எழுப்பப்பட்டாள். 

தேவன் நம்முடைய திறமைகளைப் பயன்படுத்தி நம்முடைய சமுதாயத்தையும் உலகத்தையும் கட்டியெழுப்பும் அழைப்பை நமக்கு அருளியிருக்கிறார். நாம் நம்முடைய திறமைகளை கிறிஸ்துவின் சேவைக்காய் அர்ப்பணிப்போம். அவர் நம்முடைய அன்பான இருதயத்தையும் ஜீவியத்தையும் எவ்வண்ணமாய் ஒன்றாக தைக்கிறார் என்பதை பார்ப்போம் (எபேசியர் 4:16).

பிரத்யேகமான கதறல்

ஒரு குழந்தை அழுகிறதென்றால், அது களைப்பாய் இருக்கிறது அல்லது அதற்கு பசிக்கிறது என்று அர்த்தமல்லவா? பிரவுன் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்களின் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தையின் அழுகைகளில் உள்ள நுட்பமான வேறுபாடுகள் மற்ற பிரச்சினைகளுக்கு முக்கியமான தடயங்களை கொடுக்கக்கூடும். குழந்தையின் மைய நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை அறிய, அவைகளின் அழுகுரலில் இருக்கும் சுருதி, ஓசை ஆகியவைகளை அடிப்படையாய் வைத்து கணினியின் துணையோடு கண்டறியும் மருத்துவ செயல்பாடுகள் அமுலில் உள்ளது. 

தேவன் தம்முடைய ஜனங்களின் வித்தியாசமான கூக்குரலைக் கேட்டு, அவர்களுடைய இருதயத்தின் நிலையைத் தீர்மானிப்பார் என்றும் கிருபையுடன் அவர்களுக்கு இரங்குவார் என்றும் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். யூதேயா, தேவனிடம் ஆலோசனைக் கேட்பதற்கு பதிலாக, எகிப்தின் உதவியை நாடியது (ஏசாயா 30:1-7). அவர்கள் தொடர்ந்து தேவனிடத்தில் முரட்டாட்டம் செய்தால், தேவன் அவர்களுக்கு தோல்வியையும் அவமானத்தையும் கொண்டுவருவதாக எச்சரிக்கிறார். இருப்பினும், அவர்களின் “கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்க” (வச. 18) தீர்மானித்தார். அவர்கள் தேவனிடத்தில் மனந்திரும்பி விசுவாசத்துடன் மன்றாடி கதறினாலொழிய அவர்களுக்கு மீட்பு வராது. கர்த்தருடைய ஜனங்கள் அவரிடத்தில் கதறி அழும்போது, அவர் அவர்களுடைய பாவத்தை மன்னித்து அவர்களின் ஆவிக்குரிய வலிமையை புதுப்பிப்பார் (வச. 8-26). 

இதே விஷயம் இன்று கிறிஸ்தவர்களாகிய நமக்கும் பொருந்தும். நம்முடைய மனந்திரும்புதலின் கதறல் சத்தத்தை பரலோகப் பிதா கேட்கும்போது, அவர் நம்மை மன்னித்து, அவர் மீதான நம்முடைய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் புதுப்பிக்கிறார். 

தேவனுக்கான நல்ல பிரச்சனை

ஒரு நாள் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவள் தன்னுடைய வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவன் பிளேடைக் கொண்டு தன்னுடைய கையை கீறிக்கொள்வதைப் பார்த்தாள். அதை சரிசெய்வதற்கு அவனுடைய கையிலிருந்த அந்த பிளேடைப் பிடுங்கி, தூக்கியெறிந்தாள். அவளுடைய செயலுக்கு அவள் பாராட்டப்படாமல், பத்து நாட்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். ஏன்? பள்ளியில் அனுமதிக்கப்படாத பிளேடை அவள் சிறிது நேரம் கையில் பிடுங்கி வைத்திருந்ததை குற்றமாய் கருதி, அவளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதை மறுபடியும் செய்வாயா? என்று அவளிடம் கேட்டபோது, “எனக்கு பிரச்சனை ஏற்பட்டாலும்... அதை மறுபடியும் செய்வேன்” என்று அவள் துணிச்சலாய் பதிலளித்திருக்கிறாள். நன்மை செய்யப்போன அவள் பிரச்சனையில் மாட்டிக்கொண்டாள் (அவளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொண்டனர்). இராஜ்யத்தைக் குறித்த இயேசுவின் போதனை, மார்க்கத் தலைவர்களுடன் இதுபோன்ற நல்ல பிரச்சனைக்கு வழிநடத்திற்று.  

சூம்பின கையுடைய ஒரு மனிதனை இயேசு குணப்படுத்தியதை கேள்விப்பட்ட பரிசேயர்கள் தங்கள் விதிகளை மீறுவதாக குற்றஞ்சாட்டினர். ஓய்வுநாளில் குழியில் சிக்கியிருக்கும் ஒரு ஆட்டுக்குட்டியை மீட்பது அவசியம் என்று தன்னுடைய ஜனத்திற்கு விளங்கப்பண்ணிய இயேசு, “ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்” (மத்தேயு 12:12) என்று கூறுகிறார். அவரே ஓய்வுநாளுக்கு ஆண்டவர் என்பதினால், ஓய்வுநாளில் என்ன செய்யவேண்டும் செய்யக்கூடாது என்பதை இயேசுவே சொல்லுகிறார் (வச. 6-8). இயேசுவின் இந்த செய்கை மார்க்கத் தலைவர்களை கோபமூட்டும் என்பதை இயேசு அறிந்திருந்தும், இந்த சூம்பின கையுடைய மனுஷனை இயேசு சொஸ்தமாக்குகிறார் (வச. 13-14).  

கிறிஸ்தவர்கள் சிலவேளைகளில் நல்ல பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. ஆனால் அதில் மனிதர்களைப் பிரியப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படாமல், தேவனை மாத்திரம் பிரியப்படுத்த பிரயாசப்படுவோம். தேவனுடைய வழிநடத்துதலின்பேரில் அதை நாம் செய்ய முற்படும்போது, நாம் இயேசுவை பிரதிபலித்து, விதிமுறைகள் மற்றும் சடங்காச்சாரங்களைக் காட்டிலும் மக்கள் முக்கியம் என்று கருத முற்படுகிறோம்.

தேவனுடைய வழித்தடத்தில் செல்லுதல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, 218 பேருடன் சென்ற ரயில், வடமேற்கு ஸ்பெயினில் தடம் புரண்டதில் 79 பேர் இறந்தனர், 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுனரால் அந்த விபத்தை விளக்க முடியவில்லை, ஆனால் வீடியோ காட்சிகள் அதை செய்தது. ஒரு கொடிய வளைவைத் தாண்டும் முன் ரயில் மிக வேகமாக சென்று, ரயிலில் உள்ள அனைவரையும் பாதுகாப்பதற்காக அனுமதிக்கப்பட்ட வேக அளவை தாண்டியது. ஸ்பெயினின் தேசிய இரயில் நிறுவனத்தில் முப்பது வருட அனுபவமிக்கவராக இருந்தபோதிலும், ஓட்டுநர் வேக எல்லையை புறக்கணித்ததால் பலர் உயிரிழந்தனர்.

 

உபாகமம் 5 இல், மோசே தனது மக்களுக்கான தேவனின் உடன்படிக்கை எல்லைகளை நினைப்பூட்டினார். மோசே ஒரு புதிய தலைமுறையினருக்கு தேவனின் அறிவுறுத்தலை, அவருடனான தங்கள் சொந்த உடன்படிக்கையாகக் கருதும்படி ஊக்கப்படுத்தினார் (வ. 3), அவர் பத்துக் கட்டளைகளை மீண்டும் கூறினார் (வவ. 7-21). கட்டளைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமும், முந்தைய தலைமுறையின் கீழ்ப்படியாமையிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதன் மூலமும், மோசே இஸ்ரவேலர்களை பயபக்தியோடும், தாழ்மையோடும், தேவனின் உண்மைத்தன்மையைக் கவனத்தில் கொள்ளும்படி அழைத்தார். தேவன் தம்முடைய மக்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தினார், அவருடைய வழிகளில் உண்மையாய் நடப்பவர்கள், தங்கள் வாழ்க்கையையோ, மற்றவர்களின் வாழ்க்கையையோ சிதைக்க மாட்டார்கள். தேவ ஞானத்தைப் புறக்கணித்தால், அவர்கள் தங்கள் சொந்த ஆபத்தில் விழுவார்கள்.

 

இன்று, தேவன் நம்மை வழிநடத்திச் செல்வதால், வேதவாக்கியங்களை நம் மகிழ்ச்சியாகவும், ஆலோசகராகவும், நம் வாழ்வின் பாதுகாப்புத் தண்டவாளமாகவும் கொள்வோம். ஆவியானவர் நம்மை வழிநடத்துவதால், அவருடைய ஞானமான பாதுகாப்பிற்குள் முழு மனதுடன் நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கலாம்.

உதவிக்கான அழுகை

டேவிட் வில்லிஸ் வாட்டர்ஸ்டோன்ஸ் புத்தகக் கடையின் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்த பொழுது, விளக்குகள் அணைக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். கடைக்குள் சிக்கிக் கொண்டார்! வேறு என்ன செய்வது என்று தெரியாமல், அவர் ட்விட்டரைப் பார்த்து ட்வீட் செய்தார்: “ஹாய் @வாட்டர்ஸ்டோன்ஸ். உங்கள் ட்ரஃபல்கர் ஸ்கொயர் புத்தகக் கடையில் நான் இப்போது 2 மணி நேரமாக பூட்டப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை வெளியே விடுங்கள்”. அவர் ட்வீட் செய்த சிறிது நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார்.

 

நாம் சிக்கலில் இருக்கும்போது உதவி பெற ஒரு வழி இருப்பது நல்லது. நாமே உருவாக்கிக் கொள்ளும் பிரச்சனையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, நம் அழுகைக்குப் பதிலளிக்க ஒருவர் இருக்கிறார் என்று ஏசாயா கூறுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி எழுதும் போது, தம் மக்கள் தேவபக்தியை பொறுப்பற்ற நிலையில் கடைபிடிக்கிறார்கள் என தேவன் குற்றம் சாட்டியதாக எழுதுகிறார். மதம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு, ஏழைகள் மீதான தங்கள் அடக்குமுறையை மறைத்து வெறுமையான சுய சேவையில் ஈடுபடுகின்றனர் (ஏசாயா 58:1-7). இச்செயல்களை தேவன் அங்கீகரிக்கவில்லை. “என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்” (1:15) என்றார். தேவன் அவர்களை மனந்திரும்பவும், மற்றவர்களுக்காக கரிசனை கொள்ளும் வெளிப்புறச் செயல்களைக் காட்டவும் கூறினார் (58:6-7). அவர்கள் அப்படிச் செய்தால், அவர் அவர்களிடம், “அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி” (வ.9) என்றார்.

.

"நான் இங்கே இருக்கிறேன்" என்று சொல்லி, ஏழைகளிடம் நெருங்கிப் பழகுவோம். ஏனென்றால், உதவிக்காக நாம் செய்யும் கூக்குரல்களைக் கேட்டு, “நான் இங்கே இருக்கிறேன்” என்று தேவன் கூறுவதால்.    

அன்பான எச்சரிப்பு

2010 ஆம் ஆண்டு, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை சுனாமி தாக்கி நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை அமைப்பு சரியாக செயல்பட்டிருந்தால் உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் அல்லது வெகுவாக குறைத்திருக்கலாம். சுனாமியை முன்கூட்டியே அறிவிக்கும் கருவிகள் துண்டிக்கப்பட்டு செல்பாட்டில் இல்லாமல் இருந்தன. 

இயேசு, தம்முடைய சீஷர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிக்கும் மனந்திரும்பாத பாவங்களைக் குறித்து எச்சரிப்பு விடுக்கும்படிக்கு அவர்களுக்கு வலியுறுத்தினார். ஒருவருக்கு விரோதமாய் பாவம் செய்த விசுவாசிக்கு, அவருடைய பாவத்தை தாழ்மையுடனும் தனிப்பட்ட விதத்தில் ஜெபத்தோடும் சுட்டிக்காட்டவேண்டும் என்று இயேசு குறிப்பிடுகிறார் (மத்தேயு 18:15). அவர் மனந்திரும்பினால், அவருடனான பிரச்சனை நீங்கி, உறவு புதுப்பிக்கப்படும் (வச. 16). பாவம் செய்த அந்த நபர் மனந்திரும்பாவிடில், அந்த பிரச்சனையை சபையின் முன்னிலையில் கொண்டுவரவேண்டும் (வச. 17).  தவறிழைத்தவர் தன் தவறைக் குறித்து மனம்வருந்தாத பட்சத்தில், அவர்களை சபையை விட்டு வெளியேற்ற வேண்டும். ஆனாலும் தொடர்ந்து அவர்களுக்காக ஜெபித்து கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கத் தவறக்கூடாது. 

கிறிஸ்துவின் பிரதிநிதிகளாய் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களின் மனந்திரும்பாத பாவங்களை மென்மையாகவும் நேர்மையாகவும் அன்புடனும் எச்சரித்து, பரலோக தேவனிடத்திலும் மற்ற சக விசுவாசிகளிடத்திலுமான அவர்களின் உறவைப் புதுப்பிக்க பிரயாசப்படுவோம். இயேசு “அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன” என்று வாக்களித்திருக்கிறார் (வச. 20). 

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது. 

பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16). 

கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.